Tuesday, December 21, 2010

அரசியல்வாதியாகி விட்டார், மன்மோகன்!

எல்லோராலும் இதுவரை மதிக்கப்பட்டு வந்த பிரதமர் மன்மோகன் சிங்கும், ஒருவழியாக அரசியல்வாதியாக மாறி விட்டார். என்ன, குழப்பமாக இருக்கிறதா? ஆமாம், பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன், நிதி மந்திரியாக இருந்த காலம் முதல் இரண்டாம் முறையாக பிரதமராக பதவி வகிக்கும் இந்த காலம் வரையிலும் அவரை ஒரு அரசியல்வாதியாக மக்கள் கருதியது கிடையாது. அவரும் தேர்தலில் போட்டியிடாமல், ராஜ்யசபை மூலமாகவே பாராளுமன்றத்துக்குள் நுழைவது வழக்கம்!
ஆனால், அவருக்கும் சலித்து விட்டது போலும்... நல்ல நிர்வாகியாகவே எவ்வளவு காலம் அறியப்படுவது? நாமும் அரசியல்வாதியாக அறியப்பட வேண்டாமா என்று கருதினார் போலும்... நடந்து முடிந்த டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் சற்று வீராவேசமாக உரையாற்றிய மன்மோகன், “தேவைப்பட்டால் பாராளுமன்ற பொது கணக்கு குழு முன்பு ஆஜராகத் தயார்.... ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டும் தேவை இல்லை” என்று வீர வசனம் பேசி இருக்கிறார்.
நமது அப்பாவி மக்களும், “அடடா, பிரதமர் எதையும் மறைக்க விரும்பவில்லை என்பதால் தானே இப்படி துணிச்சலாக அறிவித்து உள்ளார்...!” என்று சிலாகித்துப் பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால், அவர்கள் சற்றே சிந்தித்துப் பார்க்கத் தவறிய விஷயம் என்ன தெரியுமா? பிரதமர் இப்படி அறிவித்து இருப்பது சராசரி அரசியல்வாதிகள் அன்றாடம் விடுக்கும் வாய்ச்சவடால்கள் தான் என்பதை...!
இவ்வளவு வீரவசனம் பேசுவதை விதித்து, பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு சம்மதிக்கலாமே? மீண்டும் கணக்கு குழுவே போதும் என்று கூறுவது எதனால்? ஏனென்றால், கணக்கு குழுவுக்கும் கூட்டுக்குழுவுக்கும் உள்ள வித்தியாசம், செசன்ஸ் கோர்ட் அதிகாரத்துக்கும் சுப்ரீம் கோர்ட் அதிகாரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றது. அதை சாமர்த்தியமாக மறைத்து விட்டு, வெறும் வாய்ச்சவடாலில் ஈடுபடுவது என்பது சாதாரண அரசியல்வாதியின் செயல் அல்லாமல் வேறு என்ன?
இப்படி வெற்று சவால் விடும் பிரதமர், தனது கண் முன்பே நடந்த மெகா கொள்ளையை தடுக்க இயலாதது மட்டுமின்றி, இரண்டு வருடமாக அதை மறைக்கத்தானே உதவி செய்தார்? சுப்ரீம் கோர்ட் கடும் எச்சரிக்கை விடுத்த பின்னர்தானே ராஜாவை ராஜினாமா செய்ய சொன்னார்? இப்போது சி.பி.ஐ. காட்டும் வேகம் (இதுவும் பாவலாவோ என்னவோ) இரண்டு வருடமாக எங்கே போச்சு? மேலிடம் அனுமதி தராதது தானே காரணமாக இருக்க முடியும்?
இதை எல்லாம் சாமர்த்தியமாக மறைத்து விட்டு, வெறும் வாய்ச்சொல்லில் வீரம் காட்டும் மன்மோகன்சிங்கும் அரசியல்வாதியாக மாறிவிட்டார்தானே?

Saturday, December 4, 2010

ஜாதி இரண்டொழிய வேறில்லை... நேர்மை ஜாதி; ஊழல் ஜாதி...!

“ஜாதி” என்பது இந்தியாவின் மிக மோசமான அடையாளம் மட்டுமல்ல, அபாயகரமான ஆயுதமும் கூட...! அதிலும் தமிழக முதல்வர் கருணாநிதி அதை கையாளும் விதமே அலாதியானது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எழும் போதெல்லாம் “உயர்ஜாதி”யினரின் சதி என்று கூப்பாடு போடுவதும், தனது குடும்பம் சம்பந்தம் வைக்க வேண்டும் என்றால் மட்டும் உயர்குடியை தேடி அலைவதும் அவருக்கு கைவந்த கலை!
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுமார் ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டு, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் முகத்தில் உமிழாத குறையாக, கிட்டத்தட்ட கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக அமைச்சரவையில் இருந்து ராஜா வெளியே அனுப்பப்பட்டதற்கு, கருணாநிதி கூறும் காரணம்,ராஜா ஒரு தலித் என்பதால் அவர் பழிவாங்கப்படுகிறாராம்... வழக்கம் போல இதற்கு பக்க வாத்தியம் வாசிக்கும் வேலை வீரமணிக்கு...
ராஜாவோடு இந்தப் பிரச்சினையில் அவர் ஒப்பிடுவது பொருளாதார மேதை பெரியவர் டி.டி.கே.வோடு! இந்தியாவின் முதல் நிதி மந்திரியாக அவர் பதவி வகித்தபோது, முந்த்ரா என்ற நஷ்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கம்பெனி பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கிய விவகாரத்தில், தனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாதபோதும் கூட, தார்மீக பொறுப்பு ஏற்று பதவியை ராஜினாமா செய்த அந்தப் பெரியவரை, அவர் உயர் ஜாதியை சேர்ந்தவர் என்பதால் விட்டு விட்டார்களாம்.
ஒப்பிடுவதற்கும் ஒரு தகுதி வேண்டாமா? தனது பதவி காலத்தில் டி.டி.கே. அவர்கள் செய்த சாதனைகள் ஒன்றா இரண்டா? இன்றும் மிகச்சிறப்பாக திகழும் யூனிட் டிரஸ்ட், தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், தண்டகாரண்யத் திட்டம், நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை, அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு பென்ஷன் கிடைக்க வழிவகை செய்த மாபெரும் திட்டம்... இன்னும் எண்ணற்ற சாதனைகளை செய்த அவர் எங்கே? பிரதமரின் எச்சரிக்கையையும் அலட்சியப்படுத்தி விட்டு நாட்டின் வளத்தை ஒரு குடும்பத்தின் லாபத்திற்கு திருப்பி விட்ட கேவலத்தை மட்டுமே செய்த ராஜா எங்கே? ஜாதியை மட்டுமே சொல்லி தப்பிக்கும் நிலையை எல்லாம் ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் தாண்டி விட்டது என்பது கருணாநிதியின் மனதுக்கே தெரிந்திருந்தாலும், வெட்டி கூச்சலிட்டு எதாவது செய்ய முடியுமா என்று தவிக்கிறார்.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பதவி இழந்த அசோக் சவான் தலித்தா? இல்லை, சுரேஷ் கல்மாடி தான் தலித்தா? அன்றைக்கு ஒரு தமிழன் என்று கூட பார்க்காமல் ஓ.வி. அழகேசன் அவர்களை, அரியலூர் ரெயில் விபத்திற்காக தார்மீக பொறுப்பேற்று பதவி விலகியேத் தீரவேண்டும் என்று கோஷமிட்டார் கருணாநிதி, அது ஜாதி அடிப்படையிலா?
பச்சைத் தமிழர் என்று பெரியாரே வாய் நிறைய பாராட்டிய காமராஜ் ஆட்சியை கவிழ்க்க ராஜாஜி உதவியைக் கேட்கும்போது மட்டும் அவர் மூதறிஞராக காட்சி அளித்தது எப்படி? அதற்கு முன்பு அதே ராஜாஜி பிடிக்காதவராக இருந்தபோது மட்டும் அவர் ஜாதி கண்ணில் பட்டது; அவரை கோணல் புத்திக்காரர், குல்லுகப் பட்டர் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி ஏசியவரும் இதே கருணாநிதிதான்!
தன்னுடைய பேரன்- பேத்திகள் இன்று மணம் முடிப்பதெல்லாம் பார்ப்பன குடும்பங்களில் என்பது கருணாநிதி குடும்பத்தை அருகில் இருந்து கவனிப்பவர்களுக்கு நன்றாகவேத் தெரியும். அங்கெல்லாம் மட்டும் இவருக்கு பார்ப்பனீயம் இனிப்பதின் மர்மம் என்னவோ?
சமீபத்தில் திடீரென நேரு குடும்பத்துக்கும் எனக்கும் நெடிய உறவு என்று சொந்தம் கொண்டாடினாரே, அந்த நேருவும் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்... ஆம்! காஷ்மீர் பண்டிட் தான்!
எனவே, தனக்கு தேவைப்படும்போது மட்டும் கையில் எடுத்துக் கொள்ளும் அந்த உளுத்துப்போன ஜாதீய வாதத்தை உடப்பில் போட்டு விட்டு, யதார்த்தத்துக்கு வருவது அவருக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் மிக மிக நல்லது! ஆம்... ஜாதி இரண்டொழிய வேறில்லை... அது ஊழல் ஜாதி மற்றும் நேர்மை ஜாதி. இதில் கருணாநிதி எந்த ஜாதி என்பது நாட்டு மக்கள் அனைவருக்குமே நன்கு தெரியும்!

வெளிச்சம் தேடும் பயணம்...!

வணக்கம்! சவுக்கடிக்கு விஜயம் செய்து வெகுநாட்களாகி விட்டது. எழுதுவதற்கு செய்திகள் எதுவும் இல்லாமல் இல்லை. நமக்கு அந்த சிரமத்தை அரசியல்வாதிகள் கொடுப்பது இல்லை. அதிலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் நாம் எல்லாம் ஜனநாயக நாட்டில்தான் வசிக்கிறோமா, இல்லை மன்னராட்சியில் அடிமைகளாக இருக்கிறோமா என்ற சந்தேகத்தை அடிக்கடி உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது.
“நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்ற வீரவசனம் பேசிக்கொண்டிருந்த ராஜா, வேறு வழியே இல்லை என்ற நிலையில் அவரை வீட்டுக்கு அனுப்பிய பிரதமரின் தொடர் மவுனம், ஊழல் வழக்கில் சிக்கி உள்ள பி.ஜே. தாமஸ் என்பவரே ஊழல் கண்காணிப்பு தலைமை அதிகாரி பொறுப்பில் இருப்பது, ராடியா டேப் விவகாரம், தி.மு.க.வினருக்கு மத்திய அமைச்சரவையில் என்னென்ன பதவிகள் பெற வேண்டும் என்பது தொடர்பாக பதவி புரோக்கர் ராடியாவுக்கும் முன்னணி செய்தியாளர் என்ற போர்வையில் உலா வரும் பர்கா தத்துக்கும் இடையே நடைபெற்ற ரகசிய பேச்சுக்களின் டேப், இந்த டேப் விவகாரங்களில் உள்ள அழுக்கை கங்கை மாசுவுடன் ஒப்பிட்டு மனம் குமுறி இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்;
வழக்கம் போல, பிரச்சினை என்று வரும்போது மட்டும் தலித் முத்திரையை கையில் எடுத்துக் கொள்ளும் கருணாநிதி, தங்களை எந்த நேரத்தில் விசாரணைக்கு அழைப்பார்களோ என்ற பதைபதைப்பில் இருக்கும் ராஜா- கனிமொழி, நடப்பதை பொறுமையாக கவனிப்போம் என்றிருக்கும் அழகிரி- ஸ்டாலின், ஊழலில் எங்கள் பங்கு இல்லாவிட்டால் எப்படி என்று தங்கள் பங்குக்கு எடியூரப்பாவை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா, நல்லாட்சி மூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிதிஷ்குமார்... இப்படி எழுத வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
எழுத்துப்பசிக்கு இரை போடும் விஷயங்கள் என்பதை விட, நமது நாடு போகும் பாதையை நினைத்து ஆதங்கப்படும் நிலைதான் உள்ளது. ஆனால், வெறும் ஆதங்கமாக மட்டும் அல்லாமல், இந்தப் பிரச்சினைகளில் உண்மையையும், வெளிச்சத்தையும் தேடும் பயணமாகத்தான் இந்த எழுத்துக்கள் இருக்கும்....!

Thursday, October 14, 2010

யாருக்கும் வெட்கமில்லை...

இரண்டு நாட்களுக்கு முன்னர், செய்தித் தாள்களைப் புரட்டியவர்களுக்கு ஒரு வேடிக்கை- அதிர்ச்சி தென்பட்டிருக்கும். “லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் வேலை நடைபெறுவதில்லை; இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்பதை நிர்ணயித்து விட்டால் அரசு அதிகாரிகளுக்கும் பேரம்பேச வேண்டிய அவசியம் இருக்காது; மக்களுக்கும் இந்த வேலைக்கும் இவ்வளவு லஞ்சம் என்று தெரிந்து விடும்” என்று உச்ச நீதிமன்றம் கேலியாகவும் கிண்டலாகவும் தனது வேதனையை பதிவு செய்துள்ளது செய்தியாக வந்துள்ளது.
சட்டத்தின் மாட்சிமையை நிலைநாட்டும் பொறுப்பில் உள்ள- நாட்டிலேயே உயர்ந்தபட்ச அமைப்பான உச்சநீதிமன்றம், லஞ்சம் குறித்த வழக்கில் தங்களது வேதனையையும் இயலாமையையும் இவ்வாறு வெளியிட்டுள்ளதைப் பார்க்கும் போது, இந்த தேசத்தைக் காப்பாற்ற இனி யாரால் முடியும் என்ற அவநம்பிக்கை நல்லோர் மனதில் எழுவது இயற்கையே!
சட்டத்தின் மாட்சிமையைக் காப்பாற்ற வேண்டிய- தவறு செய்தவர்களை தண்டிக்க எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டவர்களே இப்படி பேச நேரிட்டதை, ஊழலில் புழுத்து நெளியும் அரசியல்வாதிகளின் வெற்றி என்று எடுத்துக் கொள்வதா? அல்லது, இந்த நாட்டின் சாபக்கேடு என்று எடுத்துக் கொள்வதா?
சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்திய கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் 65 லட்சம் கோடி எனத் தெரிவிக்கிறது. இந்தத் தொகையைக் கொண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த கடனையும் அடைத்து விடுவதுடன், பல வருடங்களுக்கு இந்தியா முழுமைக்கும் பட்ஜெட் போடலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இந்த முறை பதவி ஏற்றவுடன் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அறிவிப்பு என்ன தெரியுமா? வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வருவதுதான் தனது தலையாயப் பணி என்று அறிவித்தார். ஆண்டு ஒன்று உருண்டோடி விட்டது; கொடுத்த வாக்குறுதியும் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு விட்டது.
அறுபதாயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வழக்குப் பதிவு செய்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும், விசாரணையில் துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. விசாரிக்க ஆரம்பித்தால்தானே முன்னேற்றம் ஏதும் ஏற்படும்....? இவ்வளவு பெரிய ஊழல் நடந்து இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தும் கூட பிரதமர் சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர் ஏன் கவலைப்படப் போகிறார்? மக்களிடம் சலனம் ஏற்பட்டால்தானே அவர் பயப்பட வேண்டும்?
மக்கள்தான் இலவச தொலைக்காட்சிகளில் “மானாட மயிலாட”க்களையும், தொலைக்காட்சிகளுக்கே தெரிந்த சூப்பர் ஹிட் படங்களையும் பார்த்தே மூளையை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்களே...! பின்னர் ஏன், அரசியல்வாதிகளும், நீதிபதிகளும் ஊழலை ஒழிக்க ஆர்வம் காட்ட வேண்டும்?
யாருக்கும் இங்கே வெட்கம் இல்லை...!

Thursday, October 7, 2010

வாங்கும் சம்பளத்திற்கு வேலையை செய்ய எதற்கு ஆசீர்வாதம்?

“திருச்சி கலெக்டராக இருந்த சவுண்டையா, ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டார். பொறுப்பு ஏற்பதற்கு முன்னர், முதல்வர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்”
சமீபத்தில் பத்திரிகையில் படத்துடன் வெளிவந்த செய்தி இது. ஒரு கலெக்டர் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்று, பொறுப்பேற்தற்கு முன்பு முதல்வரிடம் ஆசி பெற வேண்டிய அவசியம் என்ன? இந்த மாவட்டத்தில் ரொம்ப அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன்... இப்போது மாற்றலாகி போகும் மாவட்டம் ரொம்ப செழிப்பானது; அங்கு போய் நன்றாக வலமாக வாழ எனக்கு ஆசீர்வாதம் தாருங்கள் என்கிறாரா?
சமீப காலமாக இந்தப் பழக்கம் மிகவும் அதிகமாகி விட்டது. இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் இந்திய காவல்துறை பணி (ஐ.பி.எஸ்.) என்பது மிகவும் முக்கியமான பணிகள் ஆகும். எந்தவித அரசியல் கலப்பும் இன்றி, விருப்பு- வெறுப்பு இன்றி, நாட்டின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்ற வேண்டிய இவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களின் அடிவருடிகளாக செயல்படுவதற்கென்றே படித்து விட்டு வந்தவர்கள் போல செயல்படுவதை வெளிப்படையாக காட்டுவதுதான் இதுபோன்ற செயல்பாடுகள்.
ஒரு அதிகாரி, ஒரு பதவியில் நியமிக்கப்படுகிறார் என்னும்போது, அது அவர்களுடைய பணி தன்மையின் ஒரு பகுதிதான். ஆட்சியாளர்களிடம் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறார்கள் என்றாலே, அது அவர்களின் தயவில் பெற்ற பதவி என்பதும், அதன்மூலம் சட்டத்திற்கு புறம்பான ஏகப்பட்ட ஆதாயங்கள் காத்திருக்கின்றன என்பதை எல்லோருமே புரிந்து கொள்ளலாம்.
இப்போதெல்லாம், காவல் துறையில் எஸ்.பி. நிலை பதவிகளில் உள்ளவர்கள் கூட முதல்வரிடம் ஆசீர்வாதம் வாங்கும் புகைப்படங்கள் அடிக்கடி பத்திரிகைகளில் தென்படுகின்றன.
“நான் இதுவரை இருந்த பதவி அவ்வளவு பசை உள்ள பதவி இல்லை; இப்போது நல்ல செழிப்பான வருமானம் வரும் பதவி கொடுத்து இருக்கிறீர்கள்; அதற்கு நன்றி” என்று நமக்கெல்லாம் உணர்த்த விரும்புகிறார்களா? அல்லது, “எனக்கும் முதல்வர், துணை முதல்வரிடம் நன்கு அறிமுகம் உள்ளது” என்ற தனது சக அதிகாரிகளுக்கு சேதி சொல்ல விரும்புகிறார்களா? என்னவிதமான நோக்கம் இதில் அடங்கி இருக்கிறது?
இந்தப் பழக்கம் மிகவும் கேவலமான ஒன்று; அதனால் என்னிடம் இதுபோன்ற விஷயங்களுக்கு யாரும் வரக்கூடாது என்று முதல்வராவது சொல்ல வேண்டாமா? அதுசரி, தினசரி போட்டோ எடுத்து பத்திரிகைகளில் வெளியிடுவதைத் தவிர அவருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?
நல்ல தேசம் இது....

Tuesday, October 5, 2010

விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் எதற்கு?

ஷங்கரின் கனவு படைப்பு- ரஜினியின் அசத்தல் நடிப்பு- ஐஸ்வர்யா என்ற அழகுக் குவியலின் தோற்றம்- சந்தானத்தின் நகைச்சுவை கலாட்டா- சன் பிக்சர்ஸின் பிரமாண்டத் தயாரிப்பு- இந்தியாவிலேயே இது போன்ற தயாரிப்பு வந்ததில்லை என ஏக தடபுடலுடன், பத்திரிக்கைகளின் ஒட்டுமொத்த ஜால்ரா ஓசையுடன் வெளியான எந்திரன் படத்தின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
“நீலச்சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும்” என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு எல்லா தியேட்டர்களிலும் அனைத்து காட்சிகளின் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன என்று ஜால்ரா பத்திரிகைகளின் ஆதரவுடன் அடித்த தம்பட்டத்தின் ஓசை அடங்கும் முன், அதாவது நேற்றே பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட்டுகள் தாராளமாகக் கிடைத்தன.
முதல் நாள் எப்படியாவது ஒட்டுமொத்த கூட்டத்தையும் தியேட்டருக்கு வரவழைத்து, 50 ரூபாய் டிக்கெட்டுக்கு 300 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்ற என்ற நோக்கத்தில் பட அதிபர்கள் செய்த தகிடுதத்தம் வேணுமானால் பலித்து இருக்கலாம். ஆனால், “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு” என்ற பழமொழிக்கேற்ப, எட்டு நாள் அல்ல, மூன்றாம் நாளே புளுகு மூட்டை அவிழ்ந்து விட்டதை, முதல் நாள் 300 ரூபாய் கொடுத்து பார்த்தவர்கள் எல்லாம் மனப்புழுக்கத்தொடு எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆட்சி மற்றும் அதிகாரம் கையில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, தர்ம நியாயங்களை மட்டும் அல்ல, சட்டத்தையும் இந்தப் படத்திற்காக இஷ்டம் போல வளைத்து, எப்படி எல்லாம் ஒரே நாளில் பணத்தை சுருட்ட முடியுமோ, அப்படி எல்லாம் சுருட்டி உள்ளனர்.
நூறு கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு, “எந்திரன்” என்ற தமிழ் பெயர் (....?) வைத்து விட்டதால் முழு வரிவிலக்கு; தியேட்டரில் இஷ்டம் போல டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யக்கூடாது என்ற விதியை மீறி, எக்கச்சக்கமாக கட்டண உயர்வு... அல்ல, அல்ல.... கட்டணக் கொள்ளை நடைபெற்றதை சட்டத்தைக் கையில் வைத்து இருப்பவர்கள் கண்டுகொள்ளவில்லை; (சங்கம் போன்ற ஒரு சில நியாயமான தியேட்டர்கள், வழக்கமான விலையிலேயே டிக்கெட் விற்றனர்).
தியேட்டர்களில் வழக்கமாக நான்கு காட்சிகள் திரையிட மட்டுமே அனுமதி உண்டு. பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் ஐந்து காட்சிகளுக்கு அனுமதி கொடுப்பதும் உண்டு. ஆனால், இந்தப் படத்தை எட்டு காட்சிகள் திரையிட்டனர். முதல் நாள் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையை (வெறியை) காசாக்கி விடவேண்டும் என்ற களவாணித்தனத்திற்கு அரசு எந்திரங்களும் துணை போயின.
தனது “ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு” கொடுத்ததாக பாடி ஆடிய ரஜினிக்கு அதுவும் போதவில்லை போலிருக்கு. “ஒரு துளி வியர்வைக்கு ஒரு வைரக்கல்” வேண்டும் போல... தனது ரசிகர்களிடம் கொள்ளை அடிக்க ரஜினியும் துணை போயிருக்கிறார் என்பதுதான் உண்மை.
சரி, இவ்வளவு கொள்ளைதான் அடிக்கப் போகிறோமே, நல்ல படத்தையாவது கொடுப்போம் என்று நினைத்தார்களா...? அட... குறைந்தபட்சம், ரஜினி ரசிகர்களைத் திருப்திபடுத்தும் வகையில் ரஜினி ஸ்டைல், மேனரிஸம் போன்றவற்றையாவது திகட்டத் திகட்ட கொடுத்திருக்கலாம். அதுவும் கிடைக்காமல், ரஜினி ரசிகர்கள் ஷங்கரை கேட்ட வார்த்தையால் திட்டுவதை தியேட்டரில் காண முடிகிறது.
ஒருசிலர், சிறுவர்கள் பார்த்து ரசிக்கலாம் என்று படத்தைப் பற்றி ஒரு கருத்து சொல்கின்றனர். சிறுவர்கள் பார்த்து ரசிக்கத்தான் எண்ணற்ற தரமான ஹாலிவுட் அனிமேஷன் படங்கள் உள்ளனவே.... இதுபோன்ற அரைவேக்காட்டுப் படங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இன்றைய சிறுவர்கள் இல்லை என்பதே யதார்த்தம்.
ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் சமுதாய அவலங்களை அற்புதமாக சாடி இருப்பதுடன், அழகான காதலையும் சொல்லி இருப்பார். ஆனால், இந்தப் படத்தில் ஷங்கரின் கற்பனை முற்றிலும் வறண்டு விட்டது என்பதற்கு, காதல் காட்சிகளைக் கூட ரசிக்கும்படியாக அவரால் எடுக்க முடியாமல் திணறியதில் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது.
சினிமா என்பது லாஜிக்குக்கு எல்லாம் அப்பாற்பட்டதுதான்... ஆனால், அது முட்டாள்தனமானதாக இருக்கக் கூடாது. இதற்கு ஏகப்பட்ட காட்சிகளை உதாரணமாக சொல்லலாம். சார்ஜ் முழுவதுமாக போன ரோபோ, ஐஸ்வர்யாவின் குரலைக் கேட்டதும் தனக்குத் தானே சார்ஜ் பண்ணிக்கொண்டு, ரயில்வே ட்ராக்கில் ஸ்கேட்டிங் செய்தபடி வருவதும் (ஏன் பறந்து வரவில்லை என்பது ஷங்கருக்கு மட்டுமே தெரியும்), துண்டு துண்டாக வெட்டப்பட்டு குப்பைமேட்டில் வீசப்பட்ட பின்னர் தானாகவே ஒட்டிக்கொண்டு காரில் ஏறி படுத்துக் கொள்வதும், காமடி என்ற பெயரில் கொசுக்களுடன் பேசுவதும்... இது ரோபோவா இல்லை, விட்டலாச்சார்யா படத்தில் வரும் மாயாஜால குட்டிச்சாத்தானா?
தமிழில் டப்பிங் செய்யப்பட்ட அவதார் போன்ற ஹாலிவுட் படங்களை கண்டுகளித்து விட்ட பிறகு, கிராபிக்ஸ் என்ற பெயரில் குழந்தைத்தனமான காட்சிகளுக்காக பணத்தை இறைத்து இருப்பது, ஷங்கரின் தன்னம்பிக்கை குறைவையே காட்டுகிறது. நல்ல படைப்பாளி என்பவன், தனது கிரியேட்டிவிட்டி மேல் அபார நம்பிக்கை கொண்டிருப்பான். அது ஷங்கரிடம் சுத்தமாகக் காணப்படவில்லை.
ரஜினி நிலைமையோ இன்னும் மோசம்... தன்னுடைய வழக்கமான பாணியை வெளிப்படுத்த முடியாமல், நல்ல கதாபாத்திரமும் கிடைக்காமல், “எதைத் தின்றால் பித்தம் தெளியும்?” என்று அல்லாடுபவராகத்தான் தெரிகிறார். விஞ்ஞானி ரஜினியின் வயதான தோற்றமும், கலாபவன்மணியிடம் பயந்து ஓடும் காட்சியும் அவரது ரசிகர்களை தர்மசங்கடத்தில் நெளியச் செய்வது என்னவோ உண்மைதான்!
கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்... “விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் எதற்கு?” என்று... எந்திரனுக்கு இது முற்றும் பொருந்தும். தனது ரசிகர்களுக்கு இனியாவது துரோகம் செய்வதை ரஜினி நிறுத்திக் கொள்ள வேண்டும்...!

Monday, October 4, 2010

கோகினூர் வைரத்துக்கு மரியாதை செய்ய குப்பைமேடுகள் வரலாமா?

அக்டோபர்-2இரண்டு மகான்களின் வாழ்க்கைப் பாதையின் முக்கியமான நாள்! காந்தி பிறந்தநாள்... காமராஜர் நினைவு நாள்... இந்திய அரசியலில் என்றென்றும் அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்திய பெருமகனார்கள் இவர்கள். இந்த நாளில் இவர்களைப் போற்றிக் கொண்டாட வேண்டிய நாம், குறைந்தபட்சம் அவர்களை அவமதிக்காமலாவது இருக்கலாம்...!
தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொதுவாழ்விலும் சரி, எத்தனையோ தியாகங்களை செய்து, விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்திய காந்தி மகானை விமர்சிப்பது என்பதே இன்றைக்கு ஒரு நாகரீகமாக கருதப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஏனெனில், சமீபத்தில் இருபதைத் தொடும் இளைய தலைமுறையைச் சேர்ந்த சிலருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது, அதில் ஒரு இளம் வாலிபர், “எனக்கு காந்தியை பிடிக்காது, அவர்தான் நாடு இப்போது இருக்கும் சீரழிந்த நிலைக்குப் பொறுப்பு” என்று அனாயசமாக குற்றம் சாட்டினார்.
எதை வைத்து சொல்கிறாய் என்று கேட்டேன். அவனுக்கு சரியான விளக்கங்கள் எதையும் சொல்ல முடியவில்லை. பிறகு ஏன் எதிர்க்கிறாய் என்று கேட்டேன்... சற்று தடுமாறி விட்டு, “இல்லங்க... பிடிக்கல...” என்றான். சரி, அவரைப் பற்றிய புத்தகங்கள் ஏதாவது படித்திருக்கிறாயா என்று கேட்டதுக்கும் “இல்லை” என்றே பதில் வந்தது. அப்படி என்றால், உனக்கு இதுபோன்ற ஒரு அபிப்ராயம் எப்படி வந்தது என்று கேட்டதுக்கும் தெளிவான பதில் இல்லை.
காந்தி இறந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த ஒருவன், அவரைப் பற்றி எதையும் தெரிந்து கொள்ளாமல், அவரை தவறாக விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? அதுவும், அவர் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டே, அவரைத் தூற்றுவது அநியாயம் அல்லவா? “காந்தியைப் பிடிக்காது; அவர் சரியான ஆள் இல்லை” என்று பேசுவதே பேஷன் என்று ஆகிவிட்டது என்றால், இது ஒருவிதமான குதர்க்கமான மனநிலையே அன்றி என்ன...?
இது இப்படி இருக்க, காமராஜர் நினைவு நாளுக்காக அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது சம்பந்தமாக பத்திரிகைகளில் ஏராளமான விளம்பரங்கள் வந்திருந்தன.
ஒரு முதல்வர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர், கர்மவீரர் காமராஜர். எளிமை என்றால் என்ன என்பதற்கு அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் மறைந்தபோது அவரிடம் இருந்த கையிருப்பு வெறும் 120 ரூபாய். இன்றைய முதல்வர்களின் குடும்ப சொத்து மதிப்புகளைக் கணக்கிட, கால்குலேட்டரில் இடம் இல்லை.
எளிமையாக மட்டுமில்லை, திறமையாகவும் ஆட்சி நடத்தி, நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழகத்தை மாற்றிக் காட்டியவர். புகழின் உச்சியில் இருக்கும்போதே, பதவியை துறந்தவர். அப்பேற்பட்ட மாமனிதரின் நினைவு தினம் இன்றைக்கு அனுசரிக்கப்பட்டது. இதற்காக கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இன்றைய முதல்வரின் துணைவி ராஜாத்தியை வரவேற்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.
எளிமையின் சின்னமாக வாழ்ந்து மறைந்த மாமனிதரின் நினைவுதின அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு, கோடிகளில் புரளும் பெண்மணியான ராஜாத்தி எந்த தகுதியின் அடிப்படையில் அழைக்கப்பட்டார்? அவர் செய்த சேவை என்ன? அல்லது தியாகம்தான் என்ன?
இந்த விளம்பரங்கள் பெரும்பாலும் நாடார் இன தொழிலதிபர்களால் கொடுக்கப்பட்டு இருந்தது. சுயமரியாதை சிங்கங்களாக- ஷத்ரிய புத்திரர்களாக தங்களைப் பற்றி பெருமையாக எண்ணும் இந்த இன மக்கள், இந்தப் பெண்மணியை வரவேற்று- அதுவும் கர்மவீரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறார்களே, இவர்களுக்கு உணர்ச்சிகள் செத்து விட்டதா?
தான் முதல்வராக இருந்தபோது, தன்னுடைய தாயாரும் சகோதரியும் வறுமையில் உழன்று, ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி ஜீவிதம் நடத்தியபோதும், அவர்களுக்காக எந்த விசேஷமான வசதிகளையும் செய்து கொடுக்காமல், நேர்மையின் வடிவாக அக்னி தேவனாக ஜொலித்தாரே, அந்த மாமனிதனுக்கு யார் வேண்டுமானாலும் அஞ்சலி செலுத்துவது போன்று நடித்து விட்டுப் போகட்டும்.... ஆனால், அந்த நிகழ்ச்சியில் ஊழல் சாக்கடையில் உருண்டு புரளும் நபர்களை முன்னிலைப்படுத்தி, கர்மவீரரை அவமதிக்க வேண்டாம்...
இனத்தின் பெயரை உபயோகித்து, தங்கள் வாழ்க்கைக்கு வளம் சேர்த்துக் கொள்வதொடு நிறுத்திக் கொள்ளுங்கள்; மனிதப் புனிதர் காமராஜர் புகழை மாசுபடுத்தும் செயலில் ஈடுபடவேண்டாம்!

Saturday, October 2, 2010

எந்திரன் – ஷங்கரின் சரக்கு காலி


சினிமாத்துறைக்கு உள்ள கவர்ச்சிக்கு ஈடாக வேறு எந்த துறையையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை...! உலகம் முழுவதுமே இதுதான் யதார்த்தம். எப்போதுமே, தமிழகம் இதற்கு ஒருபடி மேல்... ஆம்! தமிழர்களைப் பொருத்தவரை சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே விளங்கி வருகிறது. சினிமா நடிகர்களை தங்களின் ஆதர்ஷ நாயகனாகவும், வாழ்க்கையின் வழிகாட்டியாகவும், தங்களை வழிநடத்தும் தலைவனாகவுமே பார்க்கிறார்கள்.
ஆனால், திரைக்குப் பின்னால் இந்த நடிகர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், இவர்களது உண்மையான சொரூபங்களைக் கண்டு அதிர்ந்து போனாலும், அமைதியாகவே இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டனர். தியாகராஜ பாகவதர் காலம் தொடங்கி, எம்.ஜி.ஆர்.- சிவாஜி, ரஜினி- கமல், விஜய்- அஜித் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டேதான் செல்கிறது...
ஒரு படம் வெளியாகும்போது, அந்தப் படத்தின் உண்மையான நிறை குறைகளை, விருப்பு வெறுப்பின்றி அலசி விமர்சனம் செய்யும் தன்மை என்பது இன்றைக்கு அபூரவமாகக் கூட காணக்கூடியதாக இல்லை. பெரிய தயாரிப்பாளர், பெரிய இயக்குனர், பெரிய நடிகர் படம் என்றால், அந்தப் படத்தை பாராட்டியேத் தீர வேண்டும் என்பது கிட்டத்தட்ட எழுதப்படாத விதியாகி விட்டது. இதற்குப் பின்னால் இருப்பது “கவர்”-ஆ? இல்லை, பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வா? தெரியவில்லை...
மிகப்பெரிய விளம்பரங்களுடன் ஏக தடபுடலாக வெளியான எந்திரன் பற்றிய விமர்சனத்திலும் இதுதான் வெளிப்பட்டு உள்ளது. “ஆஹா, ஓஹோ” என்று வெற்று வார்த்தைகளால் பாராட்டித் தள்ளி இருக்கிறார்களேத் தவிர, படம் இன்ன காரணங்களினால் சிறப்பாக இருக்கிறது என்று யாரும் சொல்லவில்லை... உண்மையில் சிறப்பாக இருந்தால்தானே, பட்டியலிட முடியும்?
முதலில், இது ரஜினி படம் என்ற கோணத்தில் பார்த்தால், மிகவும் சோபையான ரஜினியை மட்டும்தான் உங்களால் பார்க்க முடியும். அவரது ஸ்டைல், மேனரிஸம் போன்ற எதையும் பார்க்க முடியாது. காலாபவன் மணியை எதிர்க்க பயந்து கொண்டு புறமுதுகிட்டு ரஜினி ஓடும் காட்சி, அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் வெறுப்பையே அள்ளித் தந்திருக்கும்...
சரி, ஷங்கர் படம் போல, ரஜினி கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் போல என்று நினைத்தால்... அந்த நினைப்புக்கும் வேட்டுதான்! ஜென்டில்மேன், இந்தியன், முதல்வனில் பார்த்த திறமைசாலி எங்கே என்றுதான் தேட வேண்டும். உலக அழகி ஐஸ்வர்யாக்கும் ரஜினிக்கும் இடையே காதல் பொங்கும் ஒரு காட்சியைக் கூட உருப்படியாக அவரால் வைக்க முடியவில்லை. பாடல் என்றாலே நூறு பேர் கூட்டத்துக்கு நடுவே ஆடும் அதே புளித்துப்போன காட்சி அமைப்புகள், ரசிகர்களை சிகரெட் பிடிக்க வெளியே அனுப்பி விடுகின்றன.
சரி, மற்ற காட்சிகளிலாவது அவரது திறமை வெளிப்படுமா என்று எதிர்பார்த்தால், அதிலும் மண்தான்! துண்டு துண்டாக வெட்டி, அறிவியல்பூர்வமாக செத்துப்போன ரோபோ குப்பைமேட்டில் வீசப்பட்ட பின்னர், தானாக மீண்டும் ஒட்டிக்கொள்வது, கோமாளித்தனத்தின் உச்சக்கட்டம். கார் சேஸ் என்ற பெயரில் இன்னொரு அபத்தத்தையும் அரங்கேற்றி இருக்கிறார். சினிமா எவ்வளோவோ முன்னேறிவிட்ட போதிலும், இன்னும் இதுபோன்ற கேவலமான கார் சேஸ் சீன்களை எப்படித்தான் படத்தில் வைக்க ஷங்கருக்கு மனம் வந்ததோ?
சாப்ட்வேர் படித்த சந்தானமும், கருணாசும் ரஜினிக்கு உதவியாளர்களாம்... அவர்களை வைத்து என்ன பண்ணுவதென்று ஷங்கருக்கும் தெரியவில்லை... யாருக்கும் தெரியவில்லை... பாவமாக இருக்கிறது அவர்களைப் பார்த்தால்.... பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் பெற்ற பெயர் இந்தப் படத்தில் சந்தானத்துக்கு கோவிந்தா! டேனி டென்சொங்கப்பாவை வில்லன் என்று அறிமுகப்படுத்தி விட்டு, அவரையும் அம்போவென்று சாகடித்து விட்டனர்.
சரி, அறிவியல் கதை என்ற விதத்தில் பார்ப்போமா என்றால்... அதுவும் முடியவில்லை... அறிவியல் என்றாலே உண்மையும் ஆதாரமும் மிக முக்கியம். ஷங்கர் படத்தில் லாஜிக் என்றாலே என்ன என்று கேட்கும் காலத்தில் உண்மையாவது... நிரூபணமாவது...?
சார்ஜ் போன பிறகு செயலிழந்து போன ரோபோ ரஜினி, “சிட்டி” என்ற ஐஸ்வர்யாவின் அபயக்குரலை கேட்டு, அருகில் இருந்த மின்சார பாக்சில் இருந்து சார்ஜ் பண்ணிக் கொண்டு, ரயில்வே ட்ராக்கில் ஸ்கேட்டிங் பண்ணி வந்து காப்பாற்றுவது, நகைச்சுவையின் உச்சக்கட்டம்! தீவிபத்தில் சிக்கிய பெண்ணை, ஆடை இல்லாத நிலையில் தூக்கி வந்ததால், அந்தப்பெண் மானம் போயிற்று என்று கதறிக்கொண்டு லாரிக்கு குறுக்கே விழுந்து செத்துப் போவதும், செய்தி சேகரிப்பாளர்கள் மைக்கை நீட்டிக்கொண்டு நிற்பது அபத்தத்தின் உச்சம்!
இறுதியில், க்ளைமேக்ஸ் சீனில் அனிமேஷன் என்ற பெயரில் வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ஏற்பட்டது... ரோபோவை எப்படி அடக்குவது என்று தெரியாமல் நாயகன் ரஜினி திணறுவதும் (ஷங்கர் திணறி இருக்கிறார்), முடித்தால் போதும் என்ற வகையில் முடித்திருப்பதும், ஷங்கரின் தடுமாற்றத்தை காண முடிகிறது.
மொத்தத்தில் ஷங்கர் சரக்கு முடிந்து விட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது... ஐஸ்வர்யாவுடன் ஆட்டம் போடும் அற்ப ஆசைகளை ரஜினி விட்டொழித்து விட்டு, அமிதாப்பச்சன் வழியில் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.
நூறு கோடி ரூபாயில் எத்தனையோ நல்ல படங்களை கொடுத்திருக்கலாம்; எவ்வளவோ திறமைசாலிகளை வெளிக்கொணர்ந்து இருக்கலாம் என்ற ஆதங்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
“எந்திரன்” – சிங்காரிக்கப்பட்ட புற்றுநோய் நோயாளி.

Sunday, September 26, 2010

பார்க் ஷெரட்டன், BMW CAR , ஒரு இளம்பெண்...


புகார் கொடுக்கவில்லை என்றால் கொலையும் நியாயம்தானோ?
“நள்ளிரவில் பார்க் ஷெரட்டன் ஓட்டல் வாசலில் BMW காரில் நான்கு வாலிபர்கள், ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சித்த போது, கால் டாக்ஸி டிரைவர்கள் தலையிட்டு அந்தப் பெண்ணை மீட்டனர். வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்; அந்தப் பெண் புகார் கொடுக்க முன்வராததால், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. 11 மணிக்கு மேல் மது பரிமாறிய குற்றத்துக்காக ஓட்டல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்”
-இன்று காலை ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியான செய்தி இது...
ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் 11 மணிக்கு மேல் மது சப்ளை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்... இங்கு வரும் இளைஞர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுடைய பிள்ளைகள்தான்! கண்மண் தெரியாமல் குடித்து விட்டு, பெண்கள் என்ற பெயரில் நள்ளிரவுகளில் மட்டும் உலவும் சில ஜென்மங்களை அழைத்துக் கொண்டு, விலை உயர்ந்த கார்களில் மின்னல் வேகத்தில் சென்னை சாலைகளில் பறப்பது தான் இவர்களின் பொழுதுபோக்கு!
இந்தப் பொழுதுபோக்குக்கு அவ்வப்போது பலியாவது நடைபாதைவாசிகள் தான்! கடந்த வாரம் கூட தேனாம்பேட்டையில் இரண்டு உயிர்கள் இந்த வகையில் பலி கொடுக்கப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்னர், NEPC நிறுவனங்களின் அதிபரின் பதினாறு வயது மகன் பென்ஸ் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்று நடைபாதையில் உறங்கிய 11 பேர் மீது ஏற்றியதில், அதே இடத்தில் மூன்று பேர் உயிர் இழந்தனர். இந்த வழக்கில் இன்னும் எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.
சரி, சனிக்கிழமை நள்ளிரவு பார்க் ஷெரட்டன் ஓட்டல் வாசலில் நடந்த விஷயத்துக்கு வருவோம்.... பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்காததால், எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். ஏதாவது ஏடாகூடம் ஆகி, அந்தப்பெண் கொலையாகி இருந்தால், வழக்குப்பதிவு செய்து இருப்பார்களா, மாட்டார்களா?
நள்ளிரவில் நடுரோட்டில் காருக்குள் வைத்து ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சிக்கும் செய்தி கிடைத்ததும் நடவடிக்கை எடுக்க வேண்டியது போலீசாரின் கடமை அல்லவா? அதிர்ஷ்டவசமாக கால் டாக்ஸி டிரைவர்கள் தலையீட்டால், அந்தப் பெண் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.
இதுபோன்ற தறிகெட்ட இளைஞர்களுடன், மதுவின் மயக்கத்தில், நள்ளிரவில் சுற்றித் திரியும் பெண் எப்படிப்பட்டவளாக இருப்பாள்? அவளுக்கு இது சரியான தண்டனைதான் என்று வாதிடுபவர்களும் உண்டு.
விலைமகளாகவே இருந்தாலும், அவளின் விருப்பத்திற்கு மாறாக அவளை துன்புறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை. நேற்று தப்பிச் சென்ற அந்த கேடு கேட்டவர்கள் மீண்டும் இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவர்களின் கொடும் செயல்களில் நல்ல குடும்பத்துப் பெண்கள் பாதிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
நள்ளிரவில் கூட நகைகளை அணிந்து கொண்டு பெண்கள் தனியாக செல்லும் காலம் வரவேண்டும் என்பதுதான் மகாத்மா காந்தியின் கனவு! குடித்து விட்டு கும்மாளம் போடும் இழிபிறவிகள் பெண்களிடம் எப்படி நடந்து கொண்டாலும், “புகார் வரவில்லை” என்ற காரணத்திற்காக நடவடிக்கை எடுக்காத நிலை அல்ல.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்” என்றான் முண்டாசுக் கவிஞன்... மடைமை செய்யும் மாதரையும் சேர்த்துக் கொளுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது... 

Thursday, September 23, 2010

“இலவச” அரசுக்கு, உயிரும் இலவசம்தானோ ?

தமிழகத்தில் வெகு வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் தடுப்பு ஊசி கட்டணத்தை மேலும் 25 ரூபாய் ஏற்றி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த ஊசியை இலவசமாக போட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட வழக்கில், பத்து லட்சம் ஏழைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிதி இலாகாவின் பரிசீலனையில் இருப்பதால் அரசு ஆணைக்காக காத்திருப்பதாக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அது என்னமோ தெரியவில்லை, மக்களை பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளில் உடனடியாக முடிவெடுக்க மட்டும் ஆட்சியாளர்களுக்கு மனமே வரமாட்டேங்குது... சினிமாக்காரர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் விஷயத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளில் காட்டிய வேகத்தை, ஏழைகளின் உயிரைக் காக்கும் விஷயத்தில் காட்ட ஏனோ மனம் வரமாட்டேங்குது. அதிகாரபூரவமாக மட்டும் இதுவரை இந்த விஷக்காய்ச்சலுக்கு பதினோரு பேர் பலியாகி உள்ளனர்.

இந்தத் தடுப்போசியின் விலை 200 ரூபாயில் இருந்து இப்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு தரப்பில் கூறப்படுவது போல பத்து லட்சம் ஏழை மக்களுக்கு இலவசமாக ஊசி போட 22.5 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும். இதற்கு ஒப்புதல் கொடுக்க தீவிரமாக பரிசீலனை செய்யும் நிதி அமைச்சகம், அரைகுறையாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தின் மேற்கூரை செட் போட மட்டுமே இரண்டு கோடி ரூபாய் செலவழிக்க உடனடியாக ஒப்புதல் கொடுக்க முடிந்ததே, அது எப்படி?

ஒரு மிக முக்கியமான கட்டிடத்தின் மேற்கூரையை சினிமா செட் போடுவர்களை வைத்து செட் போட்டு திறப்புவிழா நடத்தப்பட்ட கேவலத்தையும் தமிழகம் பார்த்து விட்டது. அதற்கு இரண்டு கோடியை வீனாக்கத் துணிந்த நிதித் துறையால், மக்களின் உயிர் பிரச்சினைக்கு பணம் ஒதுக்க முடியவில்லையா?

அரசு சொல்லும் “ஏழை” மக்களின் ஒரு நாள் கூலியே 225 ரூபாய் இருக்காதே, பிறகு எப்படி அவர்களால், தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்?

கொலைகாரர்களால் வெட்டப்பட்டு, தன் கண்ணெதிரே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் உயிரைக் காப்பாற்ற முனையாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு, அவர் கண்ணில் தென்படாத ஏழைகள் உயிரா பெரிதாக தெரிந்துவிடப் போகிறது?

இலவசங்களினாலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் அரசுக்கு ஏழைகளின் உயிரும் இலவசக் கணக்குதானே!

Wednesday, September 22, 2010

அமைதியைக் குலைக்கும் அயோத்"தீ”...


அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் நாளை வழங்க இருக்கும் அயோத்தி பற்றிய தீர்ப்பு குறித்த பதற்றம் இப்போதே நாடு முழுவது பற்றிக்கொண்டு விட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலம் தொட்டே இருந்து வந்த அயோத்தி பிரச்சினை, பதினெட்டு வருடங்களுக்கு முன்பு பூதாகரமாக உருவெடுத்தது. வழக்கம் போல இதை ஆரம்பித்து வைத்ததும் அரசியல்வாதிகள்தான்!
இந்துக்களின் மிக முக்கிய கடவுளாக- ஆதர்ஷ புருஷனாகக் கொண்டாடப்படும் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்று பெரும்பான்மையான இந்துக்களால் அழுத்தம் திருத்தமாக நம்பப்படுகிறது. இப்போது சர்ச்சைக்குரிய இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் ஒன்று இருந்ததாதகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து படையெடுத்த வந்த பாபர், தான் பெற்ற வெற்றியின் நினைவுச்சின்னமாக, இந்தக் கோவிலை தகர்த்து விட்டு, அந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டி விட்டார்.
பல நூறு ஆண்டுகளாக இருந்த இந்த மசூதியை அகற்றி விட்டு, மீண்டும் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் நெடுங்காலமாக இருந்து வந்தது. 1992-ம் ஆண்டு அத்வானி மேற்கொண்ட ரதயாத்திரை விளைவாக இந்த மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆறாம் நாள் மிகவும் பதட்டமான நாளாகவே கடந்து செல்கிறது.
இந்த சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்தான வழக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வந்தது.... 1992-ம் ஆண்டு சம்பவத்திற்குப் பிறகு, பெரும்பாலான மக்கள் இதை மறந்துவிட்ட நிலையில், நாளை தீர்ப்பு வெளியாகப் போகிறது என்பதால் மீண்டும் நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எப்படியும் கலவரம் மூளலாம் என்ற பயம் எல்லா மாநிலத்திலும் நிலவுகிறது.
ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை அகற்றி விட்டு மசூதி கட்டிவிட்டனர் என்று இந்து அமைப்பினரும், மசூதியை எப்படி இடிக்கலாம் என்று முஸ்லிம் அமைப்பினரும் வாதிடுகின்றனர். ஆனால், இருதரப்பினருமே இந்தப் பிரச்சினையினால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தானே என்று கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆதிகாலத்தில் “மதம் பிடித்து திரிந்த மனிதனை முறைப்படுத்த வந்ததுதான் மதம்! உலகின் எந்த மதமாக இருந்தாலும், அடிப்படையான சில கோட்பாடுகள் ஒன்றாகவே இருப்பதை நாம் காணலாம்.
இந்து மதம், யூத மதம், அதில் இருந்து உருவான கிருத்தவ மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம் ஆகிய மதங்கள்தான் உலகம் முழுவதும் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. நமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எந்த மதமும் வன்முறையை ஆதரித்தது இல்லை.
ஆனால், மதத்தைப் பரப்பும் அல்லது காப்பாற்றும் முயற்சியில் நடைபெற்ற சிலுவைப் போர்கள், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளில் இன்றைக்கும் நடைபெறும் வன்முறைகள், அமைதி ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட புத்த மதம் பின்பற்றப்படும் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, வியட்நாம், மியான்மர் மற்றும் பல நாடுகளில் நடைபெற்ற வன்முறைகள் என உலகம் முழுக்க மதத்தின் பெயரால், வன்முறைகளும் கொலைகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
சரி, அயோத்திக்கு வருவோம்.... பாபர் செய்த வரலாற்று தவறைத்தான் சரி செய்கிறோம் என்று இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர். சரி, வரலாற்றைத் திருத்துவது என்று முடிவு செய்துவிட்ட பிறகு, எந்த காலக்கட்ட வரலாறு வரை திருத்த வேண்டும் என்று யார் முடிவு செய்வது? தைமூர் படையெடுப்பின்போது இடிக்கப்பட்ட கோவில்களை எல்லாம் கண்டுபிடித்து மீண்டும் கட்ட முடியுமா? இதற்கு எல்லைதான் எது? எந்த ஒரு தவறையும் மற்றொரு தவறால் சரி செய்ய முடியாது.
இஸ்லாமிய மதம்தான் அந்நிய நாட்டில் இருந்து இங்கு வந்ததே தவிர, இஸ்லாமியார்களாக இன்று இருப்பவர்கள் எல்லோரும் காலம் காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து வருபவர்கள்தான்... நமது சகோதரர்கள்தான்.... சாலைப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கோவில்களை அகற்றும்போதே இந்துக்கள் எவ்வளவு வருந்துகிறார்கள்...? அப்படி இருக்க மிகப்பெரிய மசூதி கண்ணெதிரே தகர்க்கப்பட்டதைக் கண்ட இஸ்லாமிய சகோதரர்கள் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை ஒரு உண்மையான இந்துவாக என்னால் உணர முடிகிறது.
தவிர, இந்துக்கள் மிகவும் பெருமையாக சொல்லிகொள்ளும் விஷயமே சகிப்புத் தன்மையும், மன்னிக்கின்ற பாங்கையும்தான்! ராமாயணம்- மகாபாரதத்தில் எண்ணற்ற இடங்களில் இதை நம்மால் காண முடியும். மன்னிக்கும் மனம் உள்ளவனே தெய்வத்தின் நிலைக்கு உயர்கிறான் என்று காலம் காலமாக நமக்கு சொல்லித் தரப்பட்டு வந்துள்ளது.
அப்படி இருக்க, சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர், படையெடுப்பின் பொது ஒரு தனி நபர் செய்த தவறை இன்று திருத்துகிறேன் என்று கிளம்பினால், மக்களின் வாழ்க்கை முறை முழுவதுமாக மாறிவிட்ட இந்த காலக்கட்டத்தில் அது எந்தவிதமான மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இவர்கள் உணர மாட்டார்களா?
எந்த ஒரு மனிதனுக்கும் நிம்மதியான- அமைதியான- சந்தோஷமான வாழ்க்கை தான் குறிக்கோளாக இருக்க முடியும். எந்த ஒரு மதமும், மத குருவும் அதற்கான வழியைத்தான் காட்ட வேண்டும். அதை விடுத்து, ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டு, அதன்மூலம் எரியத் தொடங்கும் நெருப்பில் குளிர் காய்பவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் விட மனித உயிரும், நிம்மதியும் மிக முக்கியமான விஷயம். எனவே, தீர்ப்பு எப்படியாக இருந்தாலும், யார் எப்படி தூண்டி விட முயற்சித்தாலும் மக்கள் அமைதி காப்பது என்று முடிவெடுத்து விட்டால், இது பிரச்சினையாகவே இருக்காது.

Tuesday, September 21, 2010

இடிந்து விழுந்தது மேம்பாலம் அல்ல...இந்திய மானம்....

“காமன்வெல்த் போட்டிகள் நடக்கும் இடத்துக்கு அருகில் கட்டப்பட்ட மேம்பாலம் நேற்று இடிந்து விழுந்து 27 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதில் நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது”
ஏற்கனவே இடிந்து விழுந்து கொண்டிருந்த இந்தியாவின் மானம் இந்த சம்பவம் மூலம் நேற்று மேலும் பொடிப்பொடியாக உதிர்ந்து போனது. இடிந்து விழுந்த பாலம் வழியாகத்தான் தினமும் விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்குள் செல்ல வேண்டும். போட்டி தொடங்கிய பின்னர் இந்த பாலம் இடிந்து விழுந்து வெளிநாட்டு வீரர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தால், இந்தியா என்ன பதில் சொல்லி இருக்கும்? இப்போது பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அன்றாடம் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள்தானே, யாருக்கு என்ன கவலை? டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், “இது சாதாரண மக்கள் நடக்கும் மேம்பாலாம்தான்” என்று அசட்டையாகத்தான் சொல்லி இருக்கிறார்.
போட்டி தொடங்கும் நேரம் நெருங்கி விட்ட நிலையில், பாலம் மட்டும் இடிந்து விழவில்லை, வீரர்கள் தங்கும் வீடுகள் லட்சணம் பற்றிய தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியர்களையும் தலைகுனிய வைத்துள்ளது.
வீரர்கள் படுக்க வேண்டிய படுக்கைகளில் தெரு நாய்கள் படுத்து இருந்த காட்சிகளும், திறந்தவெளி மைதானங்களில் காமன்வெல்த் அமைப்பின் ஊழியர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதையும், கழிப்பறைகளில் தண்ணீர் வெளியேற சரியான வசதிகள் செய்யப்படாததும், வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த விளையாட்டு வீரர்கள், அதிகாரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது.
கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் “இதைப் போன்ற மட்டமான- சுகாதாரக் குறைவான இடத்தை நாங்கள் பார்த்தது இல்லை” என்று கடுமையாக சாடி உள்ளனர். போட்டியில் கலந்து கொள்ளாமல் திரும்பி விடலாமா என்று கூட ஆலோசிக்கின்றனர்.
இவற்றை எல்லாம் பார்த்து வெட்கத்திலும், வேதனையிலும் உறைந்து போய் இருக்கும் மக்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் காமன்வெல்த் போட்டிகள் அமைப்பு மேயர், “இதெல்லாம் சாதாரண விஷயம்; இதற்கெல்லாம் வெட்கப்பட வேண்டியதில்லை; சுகாதாரக் குறைவு என்பதெல்லாம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும் விஷயம்” என்று மிகவும் அலட்சியமாக செய்தி சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் கூறி உள்ளார். வழக்கம் போல கடைசி நிமிடத்தில் பிரதமர் அலுவலகம் இந்த விஷயத்தில் தலையிட்டு உள்ளதாம்.
முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினை பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளிவரும்போது எல்லாம், “இது நாட்டின் கவுரவப் பிரச்சினை; எனவே, பிரச்சினைகளைப் பெரிது படுத்தாமல் போட்டிகள் நல்லவிதமாக நடக்க உதவ வேண்டும்” என்று விளையாட்டு அமைச்சர் எம்.எஸ். கில்லும், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், காமன்வெல்த் போட்டி அமைப்பு தலைவர் சுரேஷ் கல்மாடியும் மீண்டும் மீண்டும் கோரஸாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
எதோ இந்த விளையாட்டு நடத்தவது என்பது இந்த மூன்று பேருடைய தனிப்பட்ட சாதனை என்பது போன்றே இவர்கள் காட்டிக் கொண்டனர். இது இந்திய தேசத்தால் நடத்தப்படும் போட்டி. இதற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. (இந்தப் பணத்தை வைத்து ஒலிம்பிக் போட்டிகளையே வெகு சிறப்பாக நடத்திவிட முடியும்). இந்திய நாடு நடத்தும் போட்டி என்ற வகையில், நியாயமாக பிரதமர்தானே இந்தப் போட்டிகளின் நன்மை மற்றும் தீமைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்?
எதோ ஒரு மூன்றாம் நபர் போலவே பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் நடந்து கொள்கின்றனரே, இவர்கள் சற்றே வரலாற்றை திரும்பிப் பார்ப்பார்களா? 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இதே டெல்லியில் நடத்திய பொது, இரண்டு வருடமே அவகாசம் இருந்த நிலையிலும், அன்றைக்கு இருந்து ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிக் குறைவுகளையும் மீறி, மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார், இந்திரா காந்தி. அவருக்கு உறுதுணையாக இருந்து போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தி முடித்து, உலக அரங்கில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்க வைத்தார், ராஜீவ்காந்தி.
இன்று, ஏழு வருட அவகாசத்துக்குப் பின்னரும், எல்லாவித தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்போதும், பட்ஜெட் என்று ஒன்று இல்லாமல் பணத்தை தண்ணீராக செலவழித்தும், இவ்வளவு கேவலமான நிலைமையில் இந்தியாவின் மானத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்களே, கொஞ்சமாவது தார்மீக பொறுப்பு இருந்திருந்தால் இவர்கள் ராஜினாமா செய்து இருக்க வேண்டாமா?
காமன்வெல்த் போட்டி என்ற பெயரில், கோடி கோடியாக கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இரண்டு மாதங்களுக்கு முன்பே எல்லா ஊடகங்களும் தெள்ளத்தெளிவான ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டினார்களே, அப்போதாவது பிரதமர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? எத்தனையோ திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ள இந்த நாட்டில் கல்மாடியை நீக்கினால் என்ன நடந்து விடும்? பிரதமருக்கு எதற்கு தயக்கம்? அவரை செயல்பட விடாமல் தடுத்தது எந்த சக்தி?
 “இதனை இவனால் முடியும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவுரை சொன்னானே தெய்வப் புலவன், அவன் அறிவுரை காதில் விழவில்லை என்றால், இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிரதமர் கட்சியை சேர்ந்த மணிசங்கர் அய்யர், “காமன்வெல்த் போட்டிகள் என்ற பெயரில் மன்னிக்க முடியாத தவறுகள் நடக்கின்றன; உலக அரங்கில் நமக்கு பெரும் கெட்டப்பெயரை இது வாங்கித் தந்துவிடும். எனவே, போட்டி நடக்கும்போது நாட்டிலேயே நான் இருக்க மாட்டேன்” என்று கொதித்துப் போய் சொன்னாரே, அந்தக் கருத்துக்காவது செவி மடுத்திருக்கலாமே...?
எல்லா விதத்திலும் நம்மோடு போட்டி போடும் சீனா, எவ்வளவு அருமையாக- உலகமே வியந்து பாராட்டும் வகையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திக் காட்டினார்களே, அவர்கள் இப்போது நம்மைப் பார்த்து கைகொட்டி சிரிக்க மாட்டார்களா?
அரசியல் அசுத்தம் எதுவும் கலக்காத நேர்மையான மனிதர் என்று மக்களால் நம்பப்பட்ட மன்மோகன்சிங், எப்படியாவது பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தால் போதும் என்று நினைக்கும் வழக்கமான அரசியல்வாதியாக மாறிவிட்டதைப் பார்க்கும்போது, மிகவும் வருத்தமாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலும், காமன்வெல்த் ஊழலும்- கையாலாகாத்தனமும் அவரை ஏழேழு ஜென்மத்துக்கும் துரத்துமே...! அதைப்பற்றியாவது அவர் கவலைப்படுவாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. நமக்கு அந்தக் கவலை நிச்சயம் இருக்கிறது.
“இந்தியாவுக்கு விடுதலை கொடுக்க ஏன் மறுக்கிறீர்கள்” என்று அப்போதைய இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலிடம் கேட்டபோது, அவர் என்ன பதில் கூறினாராம் தெரியுமா? “அந்த முட்டாள்களுக்கு ஆட்சி நடத்தவெல்லாம் தெரியாது; அவர்களிடம் எப்படி இவ்வளவு அருமையான நாட்டை ஒப்படைப்பது?” என்று கேட்டாராம்...
இங்கிலாந்து பிரதமருக்கு அன்றே தெரிந்த உண்மை இந்திய ஏமாளிகளுக்குத் தெரிந்திருந்தால், மன்மோகன்களும், கல்மாடிகளும், எம்.எஸ்.கில்களும் அட்டை போல பதவிகளில் ஒட்டிக்கொண்டு இருக்க முடியுமா? “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்...”

Monday, September 20, 2010

ஒழுங்காக வரி கட்டுபவன் இளிச்சவாயனா?

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டின் கோரப்பசிக்கு இரையான ஜப்பான், அடுத்த இருபது ஆண்டுகளிலேயே பீனிக்ஸ் பறவையாக சிலிர்த்தெழுந்து, உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியது. இதற்கு முக்கிய காரணமாக விளங்கியது- விளங்குவது அவர்களது ஈடு இணையற்ற கடின உழைப்புதான்!
இதற்கு நேர்மாறாக ஒரு நாட்டை உதாரணமாக சொல்ல வேண்டுமானால், இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டை, தைரியமாக சொல்லலாம். இலவச வீட்டு மனை, இலவச வீடு, இலவச டெலிவிஷன், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை, ஒரு ரூபாயில் அரிசி, ஐம்பது பைசாவுக்கு மளிகை பொருட்கள், இலவச கியாஸ் அடுப்பு, இலவச மொபைல் போன், இது இலவசம், அது இலவசம் என்று மக்களை முழு சோம்பேறிகளாக்க என்னென்ன செய்யவேண்டுமோ, அவ்வளவும் இங்கே செய்யப்படுகிறது.
தன் பங்குக்கு மைய அரசும் ஒரு திட்டத்தை அறிவித்தது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளியோருக்கு வருடத்திற்கு நூறு நாட்களுக்கு கட்டாயம் வேலையும், அதற்கு நூறு ரூபாய் சம்பளமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திட்டத்தின் நோக்கம் நல்லவிதமாக இருந்தாலும், செயல்பாட்டில் வழக்கம் போல ஊழல் புரையோடி விட்டது.
பெரும்பாலும் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் நீர்நிலைகளை தூர் வாருதல் போன்ற வேலைகளாகத்தான் இருக்கும். ஒவ்வொரு கிராமத்திலும் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரை இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களாக கணக்கு காட்டி, அவர்களுக்கு அறுபது ரூபாயும், அரசியல்வாதிகள்- அதிகாரிகள் கூட்டணி நாற்பது ரூபாயும் எடுத்துக் கொள்வது சர்வ சாதாரண நிகழ்வு ஆகி விட்டது.
இந்த அறுபது ரூபாய்க்கு அவர்கள் எந்த வேலையும் செய்வதில்லை. வேலை நடந்த மாதிரி எழுதிக் கொள்ள அதிகாரிகளுக்குத் தெரியாதா என்ன?
ஏற்கனவே இருபது ரூபாய்க்கு இருபது கிலோ அரிசி, ஐம்பது பைசாவுக்கு மளிகைப் பொருட்கள், பிள்ளைகளுக்கு பள்ளியில் முட்டையுடன் சாப்பாடு... இது போதாதா? அரசு கொடுத்த கலர் டி.வி.யில், அவர்களது குடும்பத்து கேபிளுக்கு மட்டும் மாதம் நூறு ரூபாய் கட்டிவிட்டு, ஆனந்தமாக சீரியல் பார்த்துக் கொண்டு, வெட்டியாக பொழுது போக்கிவிடலாமே....? எதற்கு விவசாயக் கூலி வேலைக்கு போக வேண்டும்?
கடந்த தேர்தலில் தமிழகத்தைப் பார்த்து, குஜராத்தில் காங்கிரஸ் கட்சி “விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்” திட்டத்தை அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்க நரேந்திர மோடி என்ன இலவச திட்டம் அறிவிக்கப் போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் எல்லோரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், மோடியின் அறிவிப்பு என்ன தெரியுமா? “குஜராத்திகள் இலவசங்களை எதிர்பார்க்கும் பிச்சைக்காரர்கள் அல்ல. உழைத்துப் பிழைக்கும் மானமுள்ளவர்கள் குஜராத் மக்கள்; எனவே, நான் எந்த இலவசத் திட்டங்களையும் அறிவிக்க மாட்டேன். குஜராத் விவசாயிகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க நான் உறுதி அளிக்கிறேன். அதற்கு பதிலாக நியாயமான கட்டணத்தை அவர்கள் கட்டி விடுவார்கள்” என்று அறிவித்த மோடி தான், தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.
ஒவ்வொரு குஜராத்தியும் தமிழனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இலவசங்களை எதிர்பார்த்து நிற்கும் பிச்சைக்கார்கள் என்றுதானே நினைப்பார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழே அல்லாடும் மக்களுக்கு உதவி செய்வதை யாரும் தவறு என்று சொல்லமாட்டார்கள். ஆனால், இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள டி.வி.யை அரசு பணத்தில் இலவசமாக கொடுத்து விட்டு, கேபிள் கட்டணமாக தனது பேரன்களின் கேபிள் கம்பெனிக்கு வருடத்திற்கு 1200 ரூபாய் வருமானம் வர வழிசெய்து கொடுப்பதை சமூக அக்கறை உள்ள திட்டம் என்று சொன்னால், மூளை உள்ளவர்கள் சிரிக்காமல் என்ன செய்வார்கள்?
இப்போது தன் பங்குக்கு மைய அரசும் அடுத்த கேலிக்கூத்தை அரங்கேற்ற யோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மானிய விலையில் (இப்போதுள்ள விலையில்) கியாஸ் சிலிண்டர் வழங்கவும், வருமான வரி கட்டுபவர்களுக்கு மானியம் இல்லாமல் உற்பத்தி விலைக்கே (சுமார் எழுநூறு ரூபாய்) கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்...
வரி ஒழுங்காக கட்டுபவர்களுக்கு எல்லா நாடுகளிலும் பல்வேறு சலுகைகள் இருக்கும்; நமது நாட்டில் மட்டும் மேலும் மேலும் சுமையை ஏற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசு என்ன செய்தி சொல்ல வருகிறது...? “ஏன் வேலை செய்து கஷ்டப்படுகிறீர்கள்? நாங்கள் குடுக்கும் இலவசங்களை பிச்சையாக வாங்கிக் கொண்டு, சோம்பேறிகளாகவே வாழ்க்கையை ஓட்டுங்கள்” என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஓட்டுக்காக அள்ளி விடப்படும் வெட்டி இலவசங்களை குறைத்தால், அத்தியாவசிய மானியங்களை எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் குடுக்க முடியும்... ஆனால், இலவச டி.வி.க்கள் பெற்றுத்தரும் ஓட்டுக்களை நல்ல திட்டங்கள் பெற்றுத் தராது என்பது இவர்களின் அழுத்தமான நம்பிக்கை ஆயிற்றே!

Sunday, September 19, 2010

கொலையில் எங்கிருந்து வந்தது “கவுரவம்”...?


சமீப காலமாக வட இந்திய பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சி செய்திகளில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது “கவுரவக் கொலைகள்” குறித்த செய்திகள். தங்களது குடும்ப கவுரவத்தைக் காப்பாற்ற மனைவியையோ மகளையோ கொல்வதுதான் ஒரே வழி என்ற ரீதியில் செய்யப்படும் கொலைகள்தான் இந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றன.
கொலை என்பதே படுபாதகமான செயல்; இதில் கவுரவம் எங்கிருந்து வந்து ஒட்டிக்கொண்டது? என்னும் நியாயமான கேள்வி நம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த ரீதியிலான கொலைகள் பற்றிய செய்திகள் சில நாட்களாக தமிழகத்திலும் தென்படுவது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
“மதுரையில் சொந்த மகளையே விஷ ஊசி போட்டுக் கொன்ற தந்தை... சிவகங்கையில் காதல் கடிதம் எழுதிய மகளை விஷம் கொடுத்த தந்தை...” என இந்தப் பட்டியல் நீளுகிறது.
மனிதகுலம் தோன்றிய காலத்தில் இருந்தே ஆதாம்- ஏவாள்; அம்பிகாபதி- அமராவதி கதைகளை ஏராளமாக கேட்டு வளர்ந்தவர்கள்தான் நாம்! இரண்டு தூய்மையான உள்ளங்கள் ஒன்று சேருவதை இலக்கியங்களிலும், சினிமாக்களிலும் மெய்மறந்து ரசிக்கும் நமது மக்கள், தங்கள் வீட்டில் அந்த காதல் பூ மணப்பதை மட்டும் விரும்புவதில்லை.
தொலைத்தொடர்பு துறையின் அதீத வளர்ச்சியினாலும், உலகமயமாக்கல் மற்றும் இண்டர்நெட் போன்றவற்றினாலும் உலகமே உள்ளங்கையில் சுருங்கி விட்டது. அதேபோல், உலகமெங்கும் பெண்களின் கல்வியறிவு வெகுவாக முன்னேறி விட்ட காரணத்தினால் நகர்ப்புறங்களில் பழமைவாதம் என்பதும் நன்றாகவே குறைந்து விட்டது. இதனால் ஜாதி- மத ரீதியிலான பிரிவினைகள்- ஏற்றத்தாழ்வுகள் தவறு என்கின்ற விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரிக்கத்தான் செய்கிறது.
அதேபோல, பிற ஆண்களிடம் பேசுவதே தவறு என்று கருதும் போக்கில் இருந்து விடுபட்டு, ஆண்களும் பெண்களும் விகற்பம் இல்லாமல்- நண்பர்களாக பழகுவதை வெகு இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்று பெரும்பாலான பெற்றோர்களிடம் காணப்படுவதை நாம் குறிப்பிட்டுத்தான் தீரவேண்டும்.
இப்படி எல்லாவிதத்திலும் ஆண்- பெண் பேதம் என்பது குறைந்து, ஒத்த கருத்து உள்ள இருபாலர் பழகுவதை குதர்க்கம் இல்லாமல் பார்க்கும் மன நிலைக்கு சமூகம் முன்னேறி விட்டது- குறிப்பாக தமிழகம் அந்த நிலையை எட்டிவிட்டது என்று இறுமாந்து இருந்த நிலையில், சமீபத்திய செய்திகள் அந்த எண்ணத்தை சம்மட்டியால் அடித்து தகர்த்து விட்டது.
மனிதர்கள் எடுக்கும் முடிவுகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று அறிவு சொல்வதைக் கேட்டு எடுக்கப்படுவது; மற்றொன்று இதயம் சொல்படி நடப்பது...! இதயம் எப்போதுமே உணர்ச்சிகளின் கொந்தளிப்புகளுக்கு உட்பட்டது. அறிவோ, அனைத்துவித நல்லது கெட்டதையும் ஆராய்ந்து முடிவு எடுக்கும் தன்மை வாய்ந்தது.
கொலை செய்த தந்தைகள் நிச்சயமாக உணர்ச்சிவசப்பட்டு தான் இந்த பாதக செயலை செய்திருக்கின்றனர். தனது மகள் ஆண் நண்பர்களுடன் அடிக்கடி மொபைல் போனில் பேசுவதும், அவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றுவதும் தங்களது குடும்ப கவுரவத்துக்கு இழுக்கு என்பதாலேயே இந்த விபரீத முடிவை எடுத்து விட்டதாக சொல்லி இருக்கின்றனர். தங்களது மகள்களின் தவறான நடத்தையே தங்களை இந்த பாதக செயலில் தள்ளிவிட்டு விட்டதாக விசாரணையின்போது கூறி உள்ளனர். ஆனால், கொலை என்பது எதையும் நியாயப்படுத்திவிட முடியாது.
மும்பையில் கொலைத் தாண்டவம் ஆடிய கஸாப்புக்கு மரணதண்டனை விதிப்பதில் கூட எவ்வளவோ விதிமுறைகளையும், மரபுகளையும் நாம் பின்பற்றும் அதே வேளையில், இதுபோன்ற எவ்வளவோ கொலைகள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. போலீஸ் தரப்பில் கூறும்போது, “இது போன்ற எண்ணற்ற கொலைகள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. போலீஸ் கவனத்துக்கு வரும் குற்றங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்கின்றனர்.
தங்களது தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் உள்ள பழக்கவழக்க வித்தியாசங்களை புரிந்து கொள்ள இயலாமல்- புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யாமல் தங்களுடைய விருப்பப்படி மட்டுமே தங்களது குழந்தைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறான அணுகுமுறை என்பதையும், அதன் விளைவுகள் மிகவும் விபரீதமாக அமைந்துவிடக் கூடும் என்பதையும் பெற்றோர்களுக்கு புரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல, பெற்றோர்களுக்கு மனம் என்று ஒன்றே கிடையாது; தங்களுடைய சந்தோசம் ஒன்றே பிரதானம்; மொபைல் போன் கண்டுபிடித்ததே நண்பர்களுடன் அர்த்தம் இல்லாத பேச்சுக்களை பேசுவதற்காகத்தான் என்று குறிக்கோளே இல்லாமல் திரியும் பிள்ளைகளும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது நலம்!
தமிழர்கள் என்றாலே நாகரீகம் மிக்கவர்கள்; கருணையும் அன்பும் நிறைந்த அறிவாளிகள் என்ற நம்பிக்கையைத் தகர்த்திட வேண்டாம்!