Monday, October 4, 2010

கோகினூர் வைரத்துக்கு மரியாதை செய்ய குப்பைமேடுகள் வரலாமா?

அக்டோபர்-2இரண்டு மகான்களின் வாழ்க்கைப் பாதையின் முக்கியமான நாள்! காந்தி பிறந்தநாள்... காமராஜர் நினைவு நாள்... இந்திய அரசியலில் என்றென்றும் அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்திய பெருமகனார்கள் இவர்கள். இந்த நாளில் இவர்களைப் போற்றிக் கொண்டாட வேண்டிய நாம், குறைந்தபட்சம் அவர்களை அவமதிக்காமலாவது இருக்கலாம்...!
தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொதுவாழ்விலும் சரி, எத்தனையோ தியாகங்களை செய்து, விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்திய காந்தி மகானை விமர்சிப்பது என்பதே இன்றைக்கு ஒரு நாகரீகமாக கருதப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஏனெனில், சமீபத்தில் இருபதைத் தொடும் இளைய தலைமுறையைச் சேர்ந்த சிலருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது, அதில் ஒரு இளம் வாலிபர், “எனக்கு காந்தியை பிடிக்காது, அவர்தான் நாடு இப்போது இருக்கும் சீரழிந்த நிலைக்குப் பொறுப்பு” என்று அனாயசமாக குற்றம் சாட்டினார்.
எதை வைத்து சொல்கிறாய் என்று கேட்டேன். அவனுக்கு சரியான விளக்கங்கள் எதையும் சொல்ல முடியவில்லை. பிறகு ஏன் எதிர்க்கிறாய் என்று கேட்டேன்... சற்று தடுமாறி விட்டு, “இல்லங்க... பிடிக்கல...” என்றான். சரி, அவரைப் பற்றிய புத்தகங்கள் ஏதாவது படித்திருக்கிறாயா என்று கேட்டதுக்கும் “இல்லை” என்றே பதில் வந்தது. அப்படி என்றால், உனக்கு இதுபோன்ற ஒரு அபிப்ராயம் எப்படி வந்தது என்று கேட்டதுக்கும் தெளிவான பதில் இல்லை.
காந்தி இறந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த ஒருவன், அவரைப் பற்றி எதையும் தெரிந்து கொள்ளாமல், அவரை தவறாக விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? அதுவும், அவர் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டே, அவரைத் தூற்றுவது அநியாயம் அல்லவா? “காந்தியைப் பிடிக்காது; அவர் சரியான ஆள் இல்லை” என்று பேசுவதே பேஷன் என்று ஆகிவிட்டது என்றால், இது ஒருவிதமான குதர்க்கமான மனநிலையே அன்றி என்ன...?
இது இப்படி இருக்க, காமராஜர் நினைவு நாளுக்காக அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது சம்பந்தமாக பத்திரிகைகளில் ஏராளமான விளம்பரங்கள் வந்திருந்தன.
ஒரு முதல்வர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர், கர்மவீரர் காமராஜர். எளிமை என்றால் என்ன என்பதற்கு அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் மறைந்தபோது அவரிடம் இருந்த கையிருப்பு வெறும் 120 ரூபாய். இன்றைய முதல்வர்களின் குடும்ப சொத்து மதிப்புகளைக் கணக்கிட, கால்குலேட்டரில் இடம் இல்லை.
எளிமையாக மட்டுமில்லை, திறமையாகவும் ஆட்சி நடத்தி, நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழகத்தை மாற்றிக் காட்டியவர். புகழின் உச்சியில் இருக்கும்போதே, பதவியை துறந்தவர். அப்பேற்பட்ட மாமனிதரின் நினைவு தினம் இன்றைக்கு அனுசரிக்கப்பட்டது. இதற்காக கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இன்றைய முதல்வரின் துணைவி ராஜாத்தியை வரவேற்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.
எளிமையின் சின்னமாக வாழ்ந்து மறைந்த மாமனிதரின் நினைவுதின அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு, கோடிகளில் புரளும் பெண்மணியான ராஜாத்தி எந்த தகுதியின் அடிப்படையில் அழைக்கப்பட்டார்? அவர் செய்த சேவை என்ன? அல்லது தியாகம்தான் என்ன?
இந்த விளம்பரங்கள் பெரும்பாலும் நாடார் இன தொழிலதிபர்களால் கொடுக்கப்பட்டு இருந்தது. சுயமரியாதை சிங்கங்களாக- ஷத்ரிய புத்திரர்களாக தங்களைப் பற்றி பெருமையாக எண்ணும் இந்த இன மக்கள், இந்தப் பெண்மணியை வரவேற்று- அதுவும் கர்மவீரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறார்களே, இவர்களுக்கு உணர்ச்சிகள் செத்து விட்டதா?
தான் முதல்வராக இருந்தபோது, தன்னுடைய தாயாரும் சகோதரியும் வறுமையில் உழன்று, ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி ஜீவிதம் நடத்தியபோதும், அவர்களுக்காக எந்த விசேஷமான வசதிகளையும் செய்து கொடுக்காமல், நேர்மையின் வடிவாக அக்னி தேவனாக ஜொலித்தாரே, அந்த மாமனிதனுக்கு யார் வேண்டுமானாலும் அஞ்சலி செலுத்துவது போன்று நடித்து விட்டுப் போகட்டும்.... ஆனால், அந்த நிகழ்ச்சியில் ஊழல் சாக்கடையில் உருண்டு புரளும் நபர்களை முன்னிலைப்படுத்தி, கர்மவீரரை அவமதிக்க வேண்டாம்...
இனத்தின் பெயரை உபயோகித்து, தங்கள் வாழ்க்கைக்கு வளம் சேர்த்துக் கொள்வதொடு நிறுத்திக் கொள்ளுங்கள்; மனிதப் புனிதர் காமராஜர் புகழை மாசுபடுத்தும் செயலில் ஈடுபடவேண்டாம்!

No comments:

Post a Comment