Saturday, December 4, 2010

வெளிச்சம் தேடும் பயணம்...!

வணக்கம்! சவுக்கடிக்கு விஜயம் செய்து வெகுநாட்களாகி விட்டது. எழுதுவதற்கு செய்திகள் எதுவும் இல்லாமல் இல்லை. நமக்கு அந்த சிரமத்தை அரசியல்வாதிகள் கொடுப்பது இல்லை. அதிலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் நாம் எல்லாம் ஜனநாயக நாட்டில்தான் வசிக்கிறோமா, இல்லை மன்னராட்சியில் அடிமைகளாக இருக்கிறோமா என்ற சந்தேகத்தை அடிக்கடி உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது.
“நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்ற வீரவசனம் பேசிக்கொண்டிருந்த ராஜா, வேறு வழியே இல்லை என்ற நிலையில் அவரை வீட்டுக்கு அனுப்பிய பிரதமரின் தொடர் மவுனம், ஊழல் வழக்கில் சிக்கி உள்ள பி.ஜே. தாமஸ் என்பவரே ஊழல் கண்காணிப்பு தலைமை அதிகாரி பொறுப்பில் இருப்பது, ராடியா டேப் விவகாரம், தி.மு.க.வினருக்கு மத்திய அமைச்சரவையில் என்னென்ன பதவிகள் பெற வேண்டும் என்பது தொடர்பாக பதவி புரோக்கர் ராடியாவுக்கும் முன்னணி செய்தியாளர் என்ற போர்வையில் உலா வரும் பர்கா தத்துக்கும் இடையே நடைபெற்ற ரகசிய பேச்சுக்களின் டேப், இந்த டேப் விவகாரங்களில் உள்ள அழுக்கை கங்கை மாசுவுடன் ஒப்பிட்டு மனம் குமுறி இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்;
வழக்கம் போல, பிரச்சினை என்று வரும்போது மட்டும் தலித் முத்திரையை கையில் எடுத்துக் கொள்ளும் கருணாநிதி, தங்களை எந்த நேரத்தில் விசாரணைக்கு அழைப்பார்களோ என்ற பதைபதைப்பில் இருக்கும் ராஜா- கனிமொழி, நடப்பதை பொறுமையாக கவனிப்போம் என்றிருக்கும் அழகிரி- ஸ்டாலின், ஊழலில் எங்கள் பங்கு இல்லாவிட்டால் எப்படி என்று தங்கள் பங்குக்கு எடியூரப்பாவை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா, நல்லாட்சி மூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிதிஷ்குமார்... இப்படி எழுத வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
எழுத்துப்பசிக்கு இரை போடும் விஷயங்கள் என்பதை விட, நமது நாடு போகும் பாதையை நினைத்து ஆதங்கப்படும் நிலைதான் உள்ளது. ஆனால், வெறும் ஆதங்கமாக மட்டும் அல்லாமல், இந்தப் பிரச்சினைகளில் உண்மையையும், வெளிச்சத்தையும் தேடும் பயணமாகத்தான் இந்த எழுத்துக்கள் இருக்கும்....!

No comments:

Post a Comment