Saturday, October 2, 2010

எந்திரன் – ஷங்கரின் சரக்கு காலி


சினிமாத்துறைக்கு உள்ள கவர்ச்சிக்கு ஈடாக வேறு எந்த துறையையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை...! உலகம் முழுவதுமே இதுதான் யதார்த்தம். எப்போதுமே, தமிழகம் இதற்கு ஒருபடி மேல்... ஆம்! தமிழர்களைப் பொருத்தவரை சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே விளங்கி வருகிறது. சினிமா நடிகர்களை தங்களின் ஆதர்ஷ நாயகனாகவும், வாழ்க்கையின் வழிகாட்டியாகவும், தங்களை வழிநடத்தும் தலைவனாகவுமே பார்க்கிறார்கள்.
ஆனால், திரைக்குப் பின்னால் இந்த நடிகர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், இவர்களது உண்மையான சொரூபங்களைக் கண்டு அதிர்ந்து போனாலும், அமைதியாகவே இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டனர். தியாகராஜ பாகவதர் காலம் தொடங்கி, எம்.ஜி.ஆர்.- சிவாஜி, ரஜினி- கமல், விஜய்- அஜித் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டேதான் செல்கிறது...
ஒரு படம் வெளியாகும்போது, அந்தப் படத்தின் உண்மையான நிறை குறைகளை, விருப்பு வெறுப்பின்றி அலசி விமர்சனம் செய்யும் தன்மை என்பது இன்றைக்கு அபூரவமாகக் கூட காணக்கூடியதாக இல்லை. பெரிய தயாரிப்பாளர், பெரிய இயக்குனர், பெரிய நடிகர் படம் என்றால், அந்தப் படத்தை பாராட்டியேத் தீர வேண்டும் என்பது கிட்டத்தட்ட எழுதப்படாத விதியாகி விட்டது. இதற்குப் பின்னால் இருப்பது “கவர்”-ஆ? இல்லை, பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வா? தெரியவில்லை...
மிகப்பெரிய விளம்பரங்களுடன் ஏக தடபுடலாக வெளியான எந்திரன் பற்றிய விமர்சனத்திலும் இதுதான் வெளிப்பட்டு உள்ளது. “ஆஹா, ஓஹோ” என்று வெற்று வார்த்தைகளால் பாராட்டித் தள்ளி இருக்கிறார்களேத் தவிர, படம் இன்ன காரணங்களினால் சிறப்பாக இருக்கிறது என்று யாரும் சொல்லவில்லை... உண்மையில் சிறப்பாக இருந்தால்தானே, பட்டியலிட முடியும்?
முதலில், இது ரஜினி படம் என்ற கோணத்தில் பார்த்தால், மிகவும் சோபையான ரஜினியை மட்டும்தான் உங்களால் பார்க்க முடியும். அவரது ஸ்டைல், மேனரிஸம் போன்ற எதையும் பார்க்க முடியாது. காலாபவன் மணியை எதிர்க்க பயந்து கொண்டு புறமுதுகிட்டு ரஜினி ஓடும் காட்சி, அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் வெறுப்பையே அள்ளித் தந்திருக்கும்...
சரி, ஷங்கர் படம் போல, ரஜினி கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் போல என்று நினைத்தால்... அந்த நினைப்புக்கும் வேட்டுதான்! ஜென்டில்மேன், இந்தியன், முதல்வனில் பார்த்த திறமைசாலி எங்கே என்றுதான் தேட வேண்டும். உலக அழகி ஐஸ்வர்யாக்கும் ரஜினிக்கும் இடையே காதல் பொங்கும் ஒரு காட்சியைக் கூட உருப்படியாக அவரால் வைக்க முடியவில்லை. பாடல் என்றாலே நூறு பேர் கூட்டத்துக்கு நடுவே ஆடும் அதே புளித்துப்போன காட்சி அமைப்புகள், ரசிகர்களை சிகரெட் பிடிக்க வெளியே அனுப்பி விடுகின்றன.
சரி, மற்ற காட்சிகளிலாவது அவரது திறமை வெளிப்படுமா என்று எதிர்பார்த்தால், அதிலும் மண்தான்! துண்டு துண்டாக வெட்டி, அறிவியல்பூர்வமாக செத்துப்போன ரோபோ குப்பைமேட்டில் வீசப்பட்ட பின்னர், தானாக மீண்டும் ஒட்டிக்கொள்வது, கோமாளித்தனத்தின் உச்சக்கட்டம். கார் சேஸ் என்ற பெயரில் இன்னொரு அபத்தத்தையும் அரங்கேற்றி இருக்கிறார். சினிமா எவ்வளோவோ முன்னேறிவிட்ட போதிலும், இன்னும் இதுபோன்ற கேவலமான கார் சேஸ் சீன்களை எப்படித்தான் படத்தில் வைக்க ஷங்கருக்கு மனம் வந்ததோ?
சாப்ட்வேர் படித்த சந்தானமும், கருணாசும் ரஜினிக்கு உதவியாளர்களாம்... அவர்களை வைத்து என்ன பண்ணுவதென்று ஷங்கருக்கும் தெரியவில்லை... யாருக்கும் தெரியவில்லை... பாவமாக இருக்கிறது அவர்களைப் பார்த்தால்.... பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் பெற்ற பெயர் இந்தப் படத்தில் சந்தானத்துக்கு கோவிந்தா! டேனி டென்சொங்கப்பாவை வில்லன் என்று அறிமுகப்படுத்தி விட்டு, அவரையும் அம்போவென்று சாகடித்து விட்டனர்.
சரி, அறிவியல் கதை என்ற விதத்தில் பார்ப்போமா என்றால்... அதுவும் முடியவில்லை... அறிவியல் என்றாலே உண்மையும் ஆதாரமும் மிக முக்கியம். ஷங்கர் படத்தில் லாஜிக் என்றாலே என்ன என்று கேட்கும் காலத்தில் உண்மையாவது... நிரூபணமாவது...?
சார்ஜ் போன பிறகு செயலிழந்து போன ரோபோ ரஜினி, “சிட்டி” என்ற ஐஸ்வர்யாவின் அபயக்குரலை கேட்டு, அருகில் இருந்த மின்சார பாக்சில் இருந்து சார்ஜ் பண்ணிக் கொண்டு, ரயில்வே ட்ராக்கில் ஸ்கேட்டிங் பண்ணி வந்து காப்பாற்றுவது, நகைச்சுவையின் உச்சக்கட்டம்! தீவிபத்தில் சிக்கிய பெண்ணை, ஆடை இல்லாத நிலையில் தூக்கி வந்ததால், அந்தப்பெண் மானம் போயிற்று என்று கதறிக்கொண்டு லாரிக்கு குறுக்கே விழுந்து செத்துப் போவதும், செய்தி சேகரிப்பாளர்கள் மைக்கை நீட்டிக்கொண்டு நிற்பது அபத்தத்தின் உச்சம்!
இறுதியில், க்ளைமேக்ஸ் சீனில் அனிமேஷன் என்ற பெயரில் வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ஏற்பட்டது... ரோபோவை எப்படி அடக்குவது என்று தெரியாமல் நாயகன் ரஜினி திணறுவதும் (ஷங்கர் திணறி இருக்கிறார்), முடித்தால் போதும் என்ற வகையில் முடித்திருப்பதும், ஷங்கரின் தடுமாற்றத்தை காண முடிகிறது.
மொத்தத்தில் ஷங்கர் சரக்கு முடிந்து விட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது... ஐஸ்வர்யாவுடன் ஆட்டம் போடும் அற்ப ஆசைகளை ரஜினி விட்டொழித்து விட்டு, அமிதாப்பச்சன் வழியில் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.
நூறு கோடி ரூபாயில் எத்தனையோ நல்ல படங்களை கொடுத்திருக்கலாம்; எவ்வளவோ திறமைசாலிகளை வெளிக்கொணர்ந்து இருக்கலாம் என்ற ஆதங்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
“எந்திரன்” – சிங்காரிக்கப்பட்ட புற்றுநோய் நோயாளி.

2 comments:

  1. //பாவமாக இருக்கிறது அவர்களைப் பார்த்தால்.... //

    எனக்கு உங்களை பார்த்தால் கூட அப்படித்தான் தோன்றுகிறது :-)

    No hard feelings Plz

    ReplyDelete