Thursday, October 14, 2010

யாருக்கும் வெட்கமில்லை...

இரண்டு நாட்களுக்கு முன்னர், செய்தித் தாள்களைப் புரட்டியவர்களுக்கு ஒரு வேடிக்கை- அதிர்ச்சி தென்பட்டிருக்கும். “லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் வேலை நடைபெறுவதில்லை; இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்பதை நிர்ணயித்து விட்டால் அரசு அதிகாரிகளுக்கும் பேரம்பேச வேண்டிய அவசியம் இருக்காது; மக்களுக்கும் இந்த வேலைக்கும் இவ்வளவு லஞ்சம் என்று தெரிந்து விடும்” என்று உச்ச நீதிமன்றம் கேலியாகவும் கிண்டலாகவும் தனது வேதனையை பதிவு செய்துள்ளது செய்தியாக வந்துள்ளது.
சட்டத்தின் மாட்சிமையை நிலைநாட்டும் பொறுப்பில் உள்ள- நாட்டிலேயே உயர்ந்தபட்ச அமைப்பான உச்சநீதிமன்றம், லஞ்சம் குறித்த வழக்கில் தங்களது வேதனையையும் இயலாமையையும் இவ்வாறு வெளியிட்டுள்ளதைப் பார்க்கும் போது, இந்த தேசத்தைக் காப்பாற்ற இனி யாரால் முடியும் என்ற அவநம்பிக்கை நல்லோர் மனதில் எழுவது இயற்கையே!
சட்டத்தின் மாட்சிமையைக் காப்பாற்ற வேண்டிய- தவறு செய்தவர்களை தண்டிக்க எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டவர்களே இப்படி பேச நேரிட்டதை, ஊழலில் புழுத்து நெளியும் அரசியல்வாதிகளின் வெற்றி என்று எடுத்துக் கொள்வதா? அல்லது, இந்த நாட்டின் சாபக்கேடு என்று எடுத்துக் கொள்வதா?
சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்திய கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் 65 லட்சம் கோடி எனத் தெரிவிக்கிறது. இந்தத் தொகையைக் கொண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த கடனையும் அடைத்து விடுவதுடன், பல வருடங்களுக்கு இந்தியா முழுமைக்கும் பட்ஜெட் போடலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இந்த முறை பதவி ஏற்றவுடன் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அறிவிப்பு என்ன தெரியுமா? வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வருவதுதான் தனது தலையாயப் பணி என்று அறிவித்தார். ஆண்டு ஒன்று உருண்டோடி விட்டது; கொடுத்த வாக்குறுதியும் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு விட்டது.
அறுபதாயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வழக்குப் பதிவு செய்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும், விசாரணையில் துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. விசாரிக்க ஆரம்பித்தால்தானே முன்னேற்றம் ஏதும் ஏற்படும்....? இவ்வளவு பெரிய ஊழல் நடந்து இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தும் கூட பிரதமர் சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர் ஏன் கவலைப்படப் போகிறார்? மக்களிடம் சலனம் ஏற்பட்டால்தானே அவர் பயப்பட வேண்டும்?
மக்கள்தான் இலவச தொலைக்காட்சிகளில் “மானாட மயிலாட”க்களையும், தொலைக்காட்சிகளுக்கே தெரிந்த சூப்பர் ஹிட் படங்களையும் பார்த்தே மூளையை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்களே...! பின்னர் ஏன், அரசியல்வாதிகளும், நீதிபதிகளும் ஊழலை ஒழிக்க ஆர்வம் காட்ட வேண்டும்?
யாருக்கும் இங்கே வெட்கம் இல்லை...!

No comments:

Post a Comment