எல்லோராலும் இதுவரை மதிக்கப்பட்டு வந்த பிரதமர் மன்மோகன் சிங்கும், ஒருவழியாக அரசியல்வாதியாக மாறி விட்டார். என்ன, குழப்பமாக இருக்கிறதா? ஆமாம், பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன், நிதி மந்திரியாக இருந்த காலம் முதல் இரண்டாம் முறையாக பிரதமராக பதவி வகிக்கும் இந்த காலம் வரையிலும் அவரை ஒரு அரசியல்வாதியாக மக்கள் கருதியது கிடையாது. அவரும் தேர்தலில் போட்டியிடாமல், ராஜ்யசபை மூலமாகவே பாராளுமன்றத்துக்குள் நுழைவது வழக்கம்!
ஆனால், அவருக்கும் சலித்து விட்டது போலும்... நல்ல நிர்வாகியாகவே எவ்வளவு காலம் அறியப்படுவது? நாமும் அரசியல்வாதியாக அறியப்பட வேண்டாமா என்று கருதினார் போலும்... நடந்து முடிந்த டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் சற்று வீராவேசமாக உரையாற்றிய மன்மோகன், “தேவைப்பட்டால் பாராளுமன்ற பொது கணக்கு குழு முன்பு ஆஜராகத் தயார்.... ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டும் தேவை இல்லை” என்று வீர வசனம் பேசி இருக்கிறார்.
நமது அப்பாவி மக்களும், “அடடா, பிரதமர் எதையும் மறைக்க விரும்பவில்லை என்பதால் தானே இப்படி துணிச்சலாக அறிவித்து உள்ளார்...!” என்று சிலாகித்துப் பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால், அவர்கள் சற்றே சிந்தித்துப் பார்க்கத் தவறிய விஷயம் என்ன தெரியுமா? பிரதமர் இப்படி அறிவித்து இருப்பது சராசரி அரசியல்வாதிகள் அன்றாடம் விடுக்கும் வாய்ச்சவடால்கள் தான் என்பதை...!
இவ்வளவு வீரவசனம் பேசுவதை விதித்து, பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு சம்மதிக்கலாமே? மீண்டும் கணக்கு குழுவே போதும் என்று கூறுவது எதனால்? ஏனென்றால், கணக்கு குழுவுக்கும் கூட்டுக்குழுவுக்கும் உள்ள வித்தியாசம், செசன்ஸ் கோர்ட் அதிகாரத்துக்கும் சுப்ரீம் கோர்ட் அதிகாரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றது. அதை சாமர்த்தியமாக மறைத்து விட்டு, வெறும் வாய்ச்சவடாலில் ஈடுபடுவது என்பது சாதாரண அரசியல்வாதியின் செயல் அல்லாமல் வேறு என்ன?
இப்படி வெற்று சவால் விடும் பிரதமர், தனது கண் முன்பே நடந்த மெகா கொள்ளையை தடுக்க இயலாதது மட்டுமின்றி, இரண்டு வருடமாக அதை மறைக்கத்தானே உதவி செய்தார்? சுப்ரீம் கோர்ட் கடும் எச்சரிக்கை விடுத்த பின்னர்தானே ராஜாவை ராஜினாமா செய்ய சொன்னார்? இப்போது சி.பி.ஐ. காட்டும் வேகம் (இதுவும் பாவலாவோ என்னவோ) இரண்டு வருடமாக எங்கே போச்சு? மேலிடம் அனுமதி தராதது தானே காரணமாக இருக்க முடியும்?
இதை எல்லாம் சாமர்த்தியமாக மறைத்து விட்டு, வெறும் வாய்ச்சொல்லில் வீரம் காட்டும் மன்மோகன்சிங்கும் அரசியல்வாதியாக மாறிவிட்டார்தானே?